திமுக அரசின் திட்டங்களால் தேர்தலில் வெற்றி உறுதி: எம்பி துரை வைகோ பேட்டி

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதிமுக முதன்மை செயலாளர் எம்பி துரை வைகோ அளித்த பேட்டி: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு உள்ளது. விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திமுக அரசின் திட்டங்கள், சமூகநீதி நடவடிக்கை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முயற்சி ஆகியவை இந்த தேர்தலிலும் வெற்றியை தேடித்தரும். மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட முதலில் திட்டமிடப்பட்டது.

அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணியில் இருப்பதால் இந்த வெற்றியை எந்த காரணத்தை கொண்டும் இழந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இது தோல்வி பயத்தால் எடுக்கப்பட்ட முடிவல்ல. மதவாத சக்திகளை தடுக்க எடுக்கப்பட்ட அரசியல் உத்தி.

விஜய் தேர்தலை எதிர்கொள்ள மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பழக வேண்டும். விஜய் வாங்கும் வாக்குகள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.  ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்டம், எப்சிஆர்ஏ திருத்தங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர், அதனால் 90 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: