பாபோஸ்: கேண்டிடேட்ஸ் செஸ் மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் 8வது சுற்றில் அபார வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தார். சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் வீரர் மற்றும் வீராங்கனை, நடப்பு உலக செஸ் சாம்பியன் உடன் மோதும் வாய்ப்பை பெறுவர். நேற்று நடந்த மகளிர் பிரிவு 8வது சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக்கை அபாரமாக வென்றார்.
இதன் மூலம், 8 சுற்றுகள் முடிவில் 4.5 புள்ளிகள் பெற்றுள்ள அவர், அன்னா முஸிசுக், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி, சீனாவின் ஜஸ ஜனெர் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வைஷாலி, கஜகஸ்தான் கிராண்ட் மாஸ்டர் பிபிஸாரா அஸுவாபயேவா டிரா செய்தனர். ஓபன் பிரிவு 8வது சுற்றுப் போட்டி ஒன்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா, சக அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவை வீழ்த்தினார். ரஷ்ய வீரர் ஆந்த்ரே எஸிபெங்கோ – உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிண்டாரோ இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. 8 சுற்றுகள் முடிவில், சிண்டாரோ, 6.5 புள்ளிகளுடன் ஓபன் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். அனிஷ் கிரி, கரவுனா 4.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளனர். அடுத்த இடத்தில் பிரக்ஞானந்தா உள்ளார்.
