மேற்குவங்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைப்பது ஏன்? முதல்வர் மம்தா கேள்வி

 

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மம்தா பேசியதாவது: ஐந்து மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவிருந்த போதிலும், தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 500 அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. மற்ற மாநிலங்களில் மிகச் சில அதிகாரிகளையே இடமாற்றம் செய்துள்ளது. மேற்கு வங்கப் பிரிவைச் சேர்ந்த பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் பார்வையாளர்களாக தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தங்கள் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமின்றிச் சுதந்திரமான சூழலை உறுதி செய்வதற்காகவே, அவர்கள் (பாஜ) தங்களுக்குச் சாதகமான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் நியமித்து வருகின்றனர். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி அரசியலில் பாஜவை இலக்காகக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் செயல்படும். அந்த நோக்கத்தை அடைவதற்குத் தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிகளையும் உடன் அழைத்துச் செல்வோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைப்பதற்காக நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

2024ஆம் ஆண்டில் பாஜ ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது. அப்படி பார்த்தால் நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) பதவி விலக வேண்டும். உள்துறை அமைச்சர் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலக வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால், மக்களே உங்களைப் பதவி விலகச் செய்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின் காரணமாக 250 பேர் உயிரிழந்தனர்; இதற்கு நீங்கள்தான் (பாஜ) பொறுப்பேற்க வேண்டும். நான் தேர்தல் ஆணையத்தைக் குறை கூறவில்லை; சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றைப்போலவே அவர்களும் வெறும் கிளிகள் மட்டுமே. நீதிபதிகளை சிறைபிடித்தது போல் எந்தவொரு தாக்குதலையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், குற்றச் சதிக்கு மூளையாகச் செயல்பட்டவரை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி சுப்ரதிம் சர்க்கார், தற்போது தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். பாஜ தலைவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்களைப் பெருமளவில் நீக்கியுள்ளனர்; இதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும். எஸ்ஐஆர் நடைமுறை தொடர்பான அத்துமீறல்களுக்கும் நெருக்கடிகளுக்கும், பாஜவைத் தோற்கடிப்பதன் மூலம் மேற்குவங்க மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

 

Related Stories: