தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் துரை.சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திருவையாறில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்தவேனில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம். வளரும் மாநிலங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளோம். மும்மொழி கொள்கையை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் மீண்டும் இந்தி கற்கும் நிலைமை தமிழ்நாட்டுக்கு வரும். தமிழ் அல்லது ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை என்பது தான் தமிழ்நாட்டின் ஒரே கொள்கை. தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்கிறது தான் இந்த சட்டமன்ற தேர்தல். இதில் தமிழ்நாடு அணி மீண்டும் ஜெயிக்க வேண்டும். டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். மோடியின் நம்பர் ஒன் அடிமை எடப்பாடி பழனிசாமி. அவர் எனக்கு அனுபவம் கிடையாது என்கிறார். பதவிக்காக யார் காலிலும் விழுகிற அனுபவம் எனக்கு கிடையாது. எனக்கு இருக்கிற அனுபவம் எல்லாம் சுயமரியாதை அனுபவம் தான். இவ்வாறு அவர் பேசினார்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜகானை ஆதரித்து கபிஸ்தலம் கடைவீதியில் நேற்று மாலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு என்கிற பெயரை தொடர்ந்து பாஜ புறக்கணித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், உதயநிதி சமீப காலமா என்னை பற்றி ரொம்ப தப்பா பேசுறாருன்னு. நான் எதுவும் தப்பா பேசல. எடப்பாடிக்கு கூவத்தூர் ஞாபகம் இருக்கா? இந்த ஒரு போட்டோவை பாருங்கள். இந்த போட்டோவில் கீழே ஒருத்தர் படுத்திருக்கிறார். இந்த அனுபவம் எல்லாம் எனக்கு கிடையாது. மோடியினுடைய கால்களை பிடித்து அங்கேயே கிடக்கின்ற ஒரு முரட்டு அடிமைதான் எடப்பாடி பழனிசாமி. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க ஜாடிக்கேத்த மூடி மாதிரி இருக்காங்கனு.
அது மாதிரி மோடிக்கு ஏத்த ஒரு அடிமையாக நம்பர் ஒன் அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்காரு. போன தேர்தலில் எடப்பாடி ஒரு டயர் நக்கி அப்படின்னு ஒருத்தர் (அன்புமணி) பேசினாரு. எடப்பாடிக்கு கவுன்சிலர் பதவியில் நிற்பதற்கு கூட தகுதி இல்லை என்றும் பேசினார். அவருடன் கூட்டணி வைப்பதற்கு தூக்கு மாட்டி செத்து விடுவேன் என மூன்று மாதத்திற்கு முன்பு ஒருவர் (டிடிவி தினகரன்) பேசினார். இப்படி எல்லாம் பேசியவர்களிடம் கோபித்துக் கொள்ளாமல் எடப்பாடி என்னிடம் கோபித்து கொள்கிறார். இது போன்ற அடிமை கூட்டத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை எப்படியாவது கண்ட்ரோல் பண்ணனும். அதுக்கு ரிமோட் கண்ட்ரோலா எடப்பாடியை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம்ம தலைவர் சொல்ற மாதிரி என்னைக்குமே தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலா தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
