வேலூர், பிப்.19: புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்த லாரியை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை பறிமுதல் செய்தார். மேலும் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல இடங்களில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர். நிரந்தரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆற்காடு சாலை வழியாக தனது காரில் சத்துவாச்சாரி நோக்கி சென்றார். காகிதப்பட்டறை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு பார்சல் கடையில் லாரியில் இருந்து பொருட்கள் இறக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த கமிஷனர் சங்கரன் உடனடியாக காரை நிறுத்திவிட்டு, பொருட்கள் இறக்கிக் கொண்டு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்கள் உள்ளிட்டவற்றை இறக்கி வைப்பது தெரியவந்தது.