நத்தம், ஏப். 2: நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி சொறிபாறைப்பட்டியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 22ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து மார்ச் 29ம் தேதி அங்குள்ள அம்மன் குளம் ஊரணியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் அம்மன் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. விழாவில் அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
பக்தர்கள் சிலர் கிடாய் வெட்டியும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மன் மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து சங்கரன்பாறையில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளுடன் விழா நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை சொறிபாறைப்பட்டி, சங்கரன்பாறை, அய்யாபட்டி கிராமமக்கள் செய்திருந்தனர்.
