விராலிமலை, ஏப் 2: விராலிமலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் மீனவேலி, அகரப்பட்டி, செல்லம்பட்டி, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்(60) என்பவர் அவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து விற்பனைக்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
