ஊட்டி, மார்ச் 31: கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை கூடலூர் தொகுதி பொது பார்வையாளர் ஹரீஷ் ஆய்வு செய்தார். வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளங்கள், குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் தற்போது இது போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து கூடலூர் சட்டமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஹரீஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பணிகளை விரைந்தும், முறையாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, கூடலூர் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
