* வில் வித்தையில் ஷீதலுக்கு கவுரவம்
லுசானே: இந்தியாவை சேர்ந்த ஷீதல் தேவி, கடந்த 2025ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளி வில் வித்தை வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 19 வயதான ஷீதல் தேவி இரு கைகளும் இழந்தவர். இவர், கடந்தாண்டு தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடந்த உலக பாரா வில் வித்தை சாம்பியன்ஷிப் மகளிர் காம்பவுண்டு தனிநபர் பிரிவு போட்டியில், கால்களை பயன்படுத்தி வில் வித்தை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவு போட்டியில் வெள்ளி, கலப்பு அணி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
* கேண்டிடேட்ஸ் செஸ் பிரக்ஞானந்தா முதலிடம்
பாபோஸ்: சைப்ரசஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆடி வருகிறார். முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதிய பிரக்ஞானந்தா சிறப்பான வெற்றியை பதிவு செய்து ஒரு புள்ளி பெற்றார். மற்றொரு போட்டிtயில் அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோவை வீழ்த்தினார். முதல் சுற்றுகள் முடிவில், பிரக்ஞானந்தா, கரவுனா ஒரு புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர்.
* பிஎஸ்எல் போட்டியில் ஜமான் மீது புகார்
கராச்சி: இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடப்பதை போன்று பாகிஸ்தானில் பிஎஸ்எல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் லாகூர் குலாண்டர்ஸ் – கராச்சி கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. கராச்சி அணி வெற்றி பெற 14 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், கடைசி ஓவருக்கு முன்பாக, லாகூர் அணியின் ஹாரிஸ் ராஃப் பந்து வீச தயாரானார். அப்போது, லாகூர் அணியின் முன்னணி வீரர் ஃபகார் ஜமான், பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக, போட்டி நடுவர் ரோஷன் மஹானாமா விசாரணை நடத்தினார். அந்த புகாரை ஃபகார் ஜமான் மறுத்துள்ளதாக, பிஎஸ்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
