கே.வி.குப்பம், மார்ச் 17: கே.வி.குப்பம் தொகுதியில் ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.68 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதிக்கு உட்பட்ட நெல்லூர்பேட்டை ஏரி அருகில் நேற்று நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஜீவிதா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் பேரணாம்பட்டு தாலுகா, கமலாபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜின்னு என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.11 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. உடனடியாக பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி செக் போஸ்டில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் பிரவீனா தலைமையிலான குழுவினர்
சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநிலம், காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த செங்கல்பதி என்பவரின் மகன் சிவக்குமார் ஆவணமில்லாமல் எடுத்து வந்த ரூ.72 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அதே செக்போஸ்டில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சிங்காரவேல் தலைமையிலான குழுவினர் சோதனையில் மேற்கொண்டு திருப்பதி பகுதியை சேர்ந்த பஷீர் அஹ்மதின் மகன் ஷேக் முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று ரூ.2.68 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்புக்குழு அலுவலர்கள் கே.வி.குப்பம் தாசில்தார் பலராமன் மூலம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
