சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க முதல்வர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசுக்கு 1,40,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், 16வது நிதி ஆணையம் வருவாய் பற்றாக்குறை மானியத்தை நிறுத்தியதால், மாநில அரசுக்கு ஆண்டுக்கு 8,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இந்த நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு ஆலோசகர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் என 7 முக்கிய நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ‘கேபினட் அமைச்சர்’ அந்தஸ்து அதிகாரப்பூர்வமாக பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு வாகனங்கள், போலீஸ் பாதுகாப்பு மற்றும் வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகளில் 20 சதவீதத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், ‘இமாச்சல பிரதேசத்தை சுயசார்பு மாநிலமாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களின் தொடக்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொதுமக்களுக்கு கடினமான முடிவுகளை அறிவிக்கும் முன், தலைவர்களே நிதிச் சுமையை பகிர்ந்து கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
