மனைவி மீதான நடத்தையில் சந்தேகம்; குழந்தையை, தகாத உறவை நிரூபிக்கும் ஆதாரமாக கோர முடியாது: டிஎன்ஏ டெஸ்ட் கேட்ட கணவரின் மனு தள்ளுபடி

 

அமராவதி: மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குழந்தைகள் மூலம் அதனை நிரூபிக்க முடியாது என ஆந்திர உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் 112வது பிரிவின் கீழ், திருமண பந்தம் தொடரும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் சட்டபூர்வமானவர்களாகவே கருதப்படுகிறார்கள். இந்த பழைய சட்ட விதிமுறைகள் தற்போதைய அறிவியல் முன்னேற்ற காலத்திலும் குடும்ப அமைப்பை பாதுகாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன. சமூகத்தில் ஒரு குழந்தை ‘சட்டவிரோதமானது’ என்ற முத்திரை குத்தப்படுவதைத் தவிர்க்கவும், பராமரிப்பு மற்றும் வாரிசு உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டம் கவசமாகச் செயல்படுகிறது.

கடந்த காலங்களில் இது போன்ற வழக்குகளில், டிஎன்ஏ பரிசோதனை என்பது ஒருவரின் தனிப்பட்ட ரகசியம் மற்றும் குழந்தையின் அடையாளத்தைச் சிதைக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது. ‘விதிவிலக்கான மற்றும் தகுதியான வழக்குகளில்’ மட்டுமே உண்மை கண்டறிய இத்தகைய சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு விவாகரத்து வழக்கில், தனது மனைவிக்குத் கள்ளத்தொடர்பிருப்பதாகச் சந்தேகித்த கணவர், மனைவி மூலம் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக் கோரி ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள வாய்ப்பே இல்லாத சூழலை (உதாரணமாக வெளிநாட்டில் இருந்தது அல்லது சிறையில் இருந்தது) கணவர் நிரூபிக்கத் தவறினால், குழந்தைகள் அவருடையதாகவே கருதப்படும் என்று குறிப்பிட்டது. மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில், ‘டிஎன்ஏ சோதனை என்பது மனைவியின் மீதான நடத்தையை சந்தேகத்தை உறுதிப்படுத்தும் கருவியாக மாற்றக்கூடாது. ஒரு கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து வாழும் சூழல் இருக்கும்போது, பிறக்கும் குழந்தைகள் அவருடையதுதான் என்று சட்டம் கருதுகிறது.

டிஎன்ஏ பரிசோதனை மூலம் மனைவியின் நடத்தையைத் தீர்மானிக்கக் கோருவது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல. குழந்தை என்பவர் தகாத உறவை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடையாது’ என்று கூறி கணவனின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

Related Stories: