தேனி, மார்ச் 18: தேனி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெய்யில் தாக்கம் அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கெல்லாம் துவங்கி விடும் வெயில் காரணமாக காலை 10 மணிக்கெல்லாம் வெயில் புழுக்கமும், வெயிலின் தாக்கமும் அதிகரித்து விடுகிறது. இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விடிய, விடிய முளித்து விடியும் நேரத்தில் சற்றே உறங்கக்கூடிய நிலை உள்ளது. வெய்யில் காரணத்தால் பலருக்கு மர்மக்காய்ச்சலும் உடலில் கொப்புளங்களும் ஏற்பட்டு அவதியுற்று வரும் நிலை உள்ளது. பகலில் வெயிலில் உடல் உஷ்ணத்தால், உடல் எரிச்சலில் பலர் தவிக்கும் நிலை உள்ளது. வயதானவர்கள் வெயில் கொடுமை தாங்காமல் பரிதவிக்கும் நிலை அதிகரித்துள்ளது. தேனி நகரில் எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
