சாயல்குடி, மார்ச் 18: கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் கோயில் மாசா திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலாடி அருகே உள்ள ஆப்பனூரில் அரியநாச்சி அம்மனுக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் முழுவதும் மாசா எனப்படும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன் முதல் நிகழ்ச்சியாக கடந்த மாசி மாதம் முதல் செவ்வாய் கிழமை முள்ளி நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆப்பனூர் ஆண்டியனேந்தல் கிராமத்திலுள்ள அரியநாயகி அம்மன் ஆலயத்தில் கணபதி ஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு முதல்கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து ஆப்பனூரில் முள்ளி கொண்டு வரப்பட்டு முளைக்கொட்டு திண்ணையில் வைத்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இத்திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பெண்கள் பொங்கலிட்டனர், குழந்தைகளுக்கு மொட்டையடித்தும், மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் சுமார் 100க்கும் கிராமங்களிலிருந்து வந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
