தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை அமேசான் பொருட்கள் கொண்டு சென்ற லாரியின் சீல் உடைத்து அதிரடி ஆய்வு

சேத்தியாத்தோப்பு, மார்ச் 17: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள சூழலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கணக்கில் வராத பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் அவர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் லாரியை சோதனை செய்ய முற்பட்டனர் அப்போது அது அமேசான் நிறுவனத்தில் இருந்து டெலிவரி பொருட்களை கொண்டு செல்லும் வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் அமேசான் நிறுவனம் சார்பாக கண்டெய்னர் லாரிக்கு சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சீலை உடைத்து கண்டெய்னர் லாரி உள்ளே சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆய்வை தொடர்ந்து லாரியில் இருந்த பொருட்களுக்கு உண்டான உரிய ஆவணங்கள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் அங்கிருந்து கண்டெய்னர் லாரி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கணக்கில் வராத பணம் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் ஏதேனும் எடுத்து செல்லப்பட்டாலோ அவைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: