தேன்கனிக்கோட்டை, மார்ச் 17: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, தேன்கனிக்கோட்டை பகுதியில் அரசியல் கட்சி பேனர்கள், சுவர் விளம்பரம், சின்னங்களும் அழிக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான தினேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தேன்கனிக்கோட்டை பகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. பேனர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. அரசியல் கட்சி சார்பில் சுவர்களிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள், சின்னங்களை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தலைவர் சிலைகளின் சிலைகளை மூடி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
