தர்மபுரி, மார்ச் 17: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயிலில், பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல், நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில், நந்தி மற்றும் மகா லிங்கேஸ்வரருக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி ஆத்துமேடு சாலையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில், தர்மபுரி கடைவீதி மருதவாணேஸ்வரர் கோயில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோயில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோயில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோயில், சவுலுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோயில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
