சுய நலத்திற்காக நாட்டின் விவசாயத்தை பலியிட தயாராகும் மோடி அரசு: ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: பாஜ தலைமையிலான அரசு தனது சொந்த நலனுக்காக விவசாயத்தையே பலியிடத் தயாராக இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிப்பது குறித்தும், அமெரிக்கா உடனான வர்த்தகம் ஒப்பந்தம் பிரதமர் மோடி அரசின் தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையை மாற்றுமா என்பது குறித்தும் சமீபத்தில் மக்களவையில் எழுப்பிய கேள்வியை தனது பேஸ்புக் பதிவில் பகிர்ந்து கொண்டார். அதில், ‘‘விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட சி2+50சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும் சட்டரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த வாக்குறுதி ஏன் இதுவரை அமல்படுத்தப்படவில்லை? என்று மக்களவையில் 2021ம் ஆண்டில் ஒன்றிய அரசை கேட்டேன்.

நேரடியான பதிலை அளிப்பதை தவிர்த்து அரசு தனது தற்போதை குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கையையே மீண்டும் வலியுறுத்தியது.மாநிலங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை போனஸ்களை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டது. இந்த நடவடிக்கையை எந்தவொரு தர்க்கரீதியான அடிப்படையும் இல்லாமல் தேசிய முன்னுரிமைகள் என்ற பெயரில் நியாயப்படுத்தவும் அரசு முயன்றது . அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் வர்த்தகம் சாராத தடைகளை குறைப்பது குறித்து பேசுகிறதா என்பது மற்றொரு முக்கியமான கேள்வி? அரசு இதற்கும் பதிலளிக்க தவிர்க்கிறது. மோடி அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது மட்டுமல்லாமல் தனது சொந்த நலனுக்காக இந்திய விவசாயத்தையே பலியிடவும் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: