கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘இந்த 2026 சட்டமன்ற தேர்தல் நமக்கு மிக பெரும் சவாலான தேர்தல். அதேசமயம் இந்த தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். குழந்தை முதல் முதியோர் வரை ஒவ்வொருவருக்குமான திட்டத்தை நமது ஐந்தாண்டு கால ஆட்சியில் சிறப்பாக செய்து முடித்துள்ளோம்.
தற்போதைய ஒன்றிய அரசின் ஒத்துழைமையாலும், நம்மை பழி வாங்கும் நடவடிக்கைகளாலும் நீண்ட நெடிய பல திட்டங்களை நாம் செயல்படுத்த முடியாத சூழ்நிலை அமைந்தது. இந்த தேர்தலில் நமக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் நம் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான, தமிழ்நாடு மக்களின் நலன்களுக்கான திட்டங்களை நாம் செயல்படுத்துவோம். அதற்கு, நாம் இமாலய வெற்றி பெற்றாக வேண்டும்’’ என்றார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் திமுக சார்பில் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘விரைவில் பாஜ வசம் அதிமுகவை எடப்பாடி சரண்டர் செய்வார். பாஜவுக்கு எடப்பாடி பயப்படலாம். ஸ்டாலின் பயப்படமாட்டார். ஒட்டு மொத்த தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அடகு வைக்க பார்க்கிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாசிச பாஜ, அதிமுவுக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும். அதிமுக கூட்டணியை கிளீன் போல்டு ஆக்க வேண்டும்’’ என்றார்.
