தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்; 23 பேர் தேர்வுக்கு 143 பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 42 பெண்கள் உள்பட 143 பேர் போட்டியிடுகிறார்கள். இதற்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 25 உறுப்பினர்களில் 2 நியமன பெண் உறுப்பினர்கள் தவிர 23 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். இதில் 5 பெண் உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடும் அடங்கும். இந்த தேர்தலில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் 168 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் ஏற்கனவே தலைவராக உள்ள பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், பார்கவுன்சில் முன்னாள் தலைவர்கள் டி.செல்வம், கே.சந்திரமோகன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் ரா.கிரிராஜன், பார்கவுன்சில் உறுப்பினர்கள் ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் ஆர்.முரளி, எஸ்.அறிவழகன், முனைவர் எம்.விஜயராஜ், ஒன்றிய அரசு வழக்கறிஞர் எஸ்.திவாகர், செ.ரூபன், விக்டர் சகாரியா, இ.பாலமுருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவிகள் டி.பிரசன்னா, கே.சாந்தகுமாரி, வி.நளினி, பெண் வழக்கறிஞர்கள் சங்க நூலகர் மார்க்ரெட் லாரென்ஸ் மற்றும் முன்னாள் பொருளாளர் எஸ்.சாந்தகுமாரி, எல்.சுமதி உள்ளிட்ட 143 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 42 பெண் வேட்பாளர்களும் அடங்குவர். வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: