சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சூலூர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருப்பத்தூர் மாவட்டம் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் என மொத்தம் ரூ.14.92 கோடி செலவில் பதிவுத்துறைக்கு கட்டப்பட்டுள்ள 7 புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், 2025-26ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் அறிவிப்பை தொடர்ந்து கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 14 கிராமங்களில் 6 கிராமங்களை பிரித்து அந்த 6 கிராமங்களை உள்ளடக்கி கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம். தர்மபுரி பதிவு மாவட்டம், பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 12 கிராமங்கள், பென்னாகரம் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 2 கிராமங்கள்,
தர்மபுரி (மேற்கு) சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 5 கிராமங்கள் மற்றும் தர்மபுரி 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து 3 கிராமங்கள் பிரித்து மொத்தம் 22 கிராமங்களை உள்ளடக்கி தர்மபுரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
