தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் சென்னை, வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. அதில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
இனிமேல் வீடு வீடாக உங்களுடன் நான் வருகிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஆகவேண்டும் என நினைக்கிறேன். உங்கள் வீடுகளுக்கு வருகிறேன். மதியம் சைவ சாப்பாடு தயார் செய்து வையுங்கள். நீங்கள் என்னுடன் பரப்புரைக்கு வாருங்கள். இவ்வளவு நாளாக நீங்கள் சமைத்தது போதும், இன்னிமேல் ஆண்களைச் சமைக்கச் சொல்லுங்கள். உங்கள் வீட்டுக்கு நான் வரும்போது, என்னுடைய வீட்டில் இருந்து ஒரு ஆள் இங்கு வரவேண்டுமில்லையா? எனக் கேட்டவர், தனது தங்கை சீதா லட்மியை மேடையில் அறிமுகம் செய்து வைத்து, நானும் எனது தங்கையும் குடும்பமாக வந்து, ஒவ்வொரு வீடாக பரப்புரையில் ஈடுபட வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இது தற்போது விமர்சனத்திற்கு உள்ளகியுள்ளது. தொடர்ச்சியாக மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் உள்ளது என விமர்சித்து வந்தார். ஆனால் தற்போது, திடீரென தனது தங்கையை மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்து, என்னுடன் தங்கையும் வீடு வீடாகப் பரப்புரைக்கு வருவார் என அறிவிப்பது குடும்ப அரசியலில் வராதா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். மேலும், தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வளவு நாளாக இல்லாமல் திடீரென தங்கையை மேடையேற்றுவதன் பின்னணி என்ன என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.
