* தொழில் வளர்ச்சி, மகளிர் நலன், மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் இதுவரை இல்லா வகையில் முன்னேற்றம்
* ஈடில்லா வளர்ச்சி ஒன்றிய அரசின் 65க்கு மேலான விருதுகள்
* இந்தியாவின் சிறந்த முதல்வர் என ஊடகங்கள், பத்திரிகைகள், சான்றோர்களும் பாராட்டுகின்றன
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பன்முகத் திறன்கள் குறித்து கருதும் வேளையில் அவர் சென்னை மாநகராட்சி மேயராக தமிழ்நாட்டின் அமைச்சராக, துணை முதல்வராக, முதலமைச்சராக அவர் ஆற்றியுள்ள பணிகள் எல்லாம் தமிழ்நாட்டை வளர்த்து தலைநிமிரச் செய்து உயர்த்தியுள்ள சாதனைகள் எல்லாம் மணிமாலைகள் போல் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்கின்றன. அவற்றுள் சில.
மாநகராட்சி மேயராக நிர்வாகச் சிறப்பு:
சென்னைமாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்று மாநகராட்சி பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தினார். மாநகராட்சித் தரத்தை மேம்படுத்தினார். போக்குவரத்து நெரிசல்கைளை போக்கிட இந்தியாவில் எந்தவொரு மாநகராட்சியும் செய்திடாத வகையில் 10 சாலை மேம்பாலங்களை அமைத்தார். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என புகழ்பெற்ற சென்னை கடற்கரை அழகுப்படுத்தினார். சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் பூங்காக்களை அமைத்தார் சிங்காரச் சென்னை முழக்கத்தை வைத்து சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தை அமர்த்தி சென்னை மாநகரின் தூய்மையை மேம்படுத்தினார்.
தமிழ்நாடு துணை முதல்வராக:
2006- 2011 ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ளாட்சி நிறுவனங்களின் சிறப்பான பணிகளை ஊக்கப்படுத்தினார். சாதி ஆதிக்கம் காரணமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதலிய கிராமங்களில் மக்களைச் சந்தித்து நல்லிணக்கத்தை உருவாக்கி உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி சிறப்பான ஜனநாயகவாதியாக உருவெடுத்தார். ராமநாதபுரம் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக திருச்சி அருகே காவிரி நீரை எடுத்து இராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் வகுத்து மூன்றாண்டுகளில் முடிய வேண்டிய பணிகளை இரண்டாண்டுகளில் முடித்து பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றார். அதுபோல ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் தலைவரை ஜப்பான் சென்று சந்தித்து கடன் பெற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை நிறைவேற செய்தார்.
தமிழக முதல்வராக நிர்வாக திறன்:
வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வருவாய் ஈட்டமுடியாத நிலையில் வாழ்ந்து குடும்ப கடமைகளே வாழ்வு என கொண்ட மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி 1,30,69,000 மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். இன்ப அதிர்ச்சியாக 5000 ரூபாய் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க செய்துள்ளார். உயர்கல்வியைத் தொடர முடியாத ஏழை இளைஞர்களையும் மகளிர்களையும் ஊக்கப்படுத்தி கல்லூரி படிப்பை தொடர்ந்திட மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தினார். பசியோடு பள்ளி வரும் குழந்தைகளின் பசிபோக்கி படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடச் செய்திட காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி ஏறத்தாழ 20 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உட்கொள்ளச் செய்தார்.
இத்திட்டம் இங்கிலாந்து, கனடா நாடுகளிலும் இந்தியாவில் ஒடிசா, பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா முதலிய மாநிலங்களிலும் பின்பற்றப்படுகின்றன. படிப்புக்கும் வேலையில் சேருவதற்கு ஏற்ற திறனுக்கும் இருந்த இடைவெளியை போக்கிட நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் பயிற்சிகள் வழங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க செய்தார். 49 லட்சம் மாணவர்களுக்கும் 1.17 லட்சம் கல்லூரி பேராசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 2.55 கோடி பேருக்கு முதல்முறை மருத்துவச் சேவைகளும் 4.75 கோடி பேருக்கு தொடர் சேவைகளும் வழங்கி தொற்றா நோய்கள் பரவாமல் மக்கள் உயிர்களை காத்தார். இத்திட்டத்தை பாராட்டி ஜக்கிய நாடுகள் அவையே முதல்வருக்கு விருது வழங்கி பாராட்டியது.
தொழில் வளர்ச்சி:
2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சிக் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட வேண்டும் என்னும் உறுதியோடு பல தொழில் மேம்பாட்டாளர்கள் மாநாடு நடத்தி மேற்கொண்ட 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு- 36 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கு வகை செய்துள்ளார். 2021-க்கு பின் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மகத்தான சேவை செய்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 21 தளங்களுடன் டைடல் பூங்காவை உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பல டைடல் பூங்காக்களை உருவாக்கியுள்ளார். புத்தாக்கத் தொழில்கள் 4 ஆண்டு காலத்தில் 10,630 புத்தாக்கத் தொழில்களை உருவாக்கி அவற்றுள் 50 சதவீதத்திற்கு மேலான தொழில்கள் மகளிரால் தொடங்கப்பட்டவை என்னும் வரலாற்று புதுமையை நிகழ்த்தியுள்ளார். சமூகநீதி நோக்குடன் காலம் காலமாக தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் குடும்ப வாழ்வு சிறக்கவும் செழிக்கவும் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கிட 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கி எந்திரங்கள் வாங்கி சுய தொழில் புரிந்திட வழி வகுத்தார்.
தாயுமானவர் திட்டம்:
முதியோர் நலன் காத்திட 28 அன்புச் சோலை மையங்களை அமைத்துள்ளார். 65 வயதுக்கு மேற்பட்ட 27,40,703 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
விளையாட்டுத்துறை வளர்ச்சி:
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை ஒரு திருவிழாவாக நடத்தி உலகப் புகழ் பெற்றது தமிழ்நாடு. 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 299 விளையாட்டு வீரர்களுக்கு அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்பட 6,689 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.215.78 கோடி உயரிய ஊக்கத் தொகை. இந்தியாவிலேயே முதன்முதலாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடத்தி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகள். இதுவரை வரலாற்றில் இல்லா வகையில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும், 12,831 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இளைஞர்கள் இளநங்கையரிடம் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்காக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் – பழங்குடியினர்:
1000 கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு த் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்தி சாலை வசதிகள் மின்சார வசதி முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பழங்குடியினருக்கு வீடுகள் சாலை வசதிகள் மின்வசதிகள் முதலிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் தொல்குடித் திட்டம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 35 சதவீத மூலதன மானியத்துடன் வங்கிக்கடனுக்கு 6 சதவீத வட்டி மானியமும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது.
தமிழ் வளர்ச்சி:
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடி இந்தியாவிலேயே முதலாவதான அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை கடல் மீது 37 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்தார். நாட்டு விடுதலைக்காகவும் மொழிக்காகவும் பாடுபட்ட தியாகிகளுக்கும் வீர வேந்தர்களுக்கும் வேலு நாச்சியார் உள்ளிட்ட பல வீரங்கனைகளுக்கும் சிலைகளையும் நினைவு மண்டபங்களையும் அமைத்தார். சங்க இலக்கியம் முதலான நூல்களை அயல் மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடுதல் முதலான தமிழ் பரப்பும் பணிகளை மேற்கொள்கிறார்.
விவசாயிகள்:
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி தந்துள்ளார். மழை வெள்ளக் காலங்களில் ஏற்பட்ட பயிச் சேதங்களுக்கு இழப்பீடு தந்துள்ளார். பாசன வசதிகள் சிறப்பாக நடைபெற 2 இலட்சம் விவசாய பம்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். பாசன வசதி தடையின்றி நடைபெற 121 தடுப்பணைகள் 101 அணைக்கட்டுகள் கட்டியுள்ளார்.
அரசு ஊழியர்-ஆசிரியர் நலன்:
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றியுள்ளார். ஈட்டிய விடுப்பினை சரண் செய்து பணமாக்கும் வசதியினை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்,மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார்.
அறநிலையத்துறை:
4000-க்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழக்கு விழாக்கள். 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு. சென்னையில் ஹஜ் இல்லம் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமனம். நெடுஞ்சாலைத்துறை மூலம் 24,774 கிமீ நீளச் சாலைகள் 180 உயர்மட்ட பாலங்கள். இப்படி பல்வகையிலும் திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாடு இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர் என பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பல அரசியல் தலைவர்களும் போற்றுகின்றனர்.
