ராதாரவிக்கு ரூ.4 லட்சம் கொடுத்து கமல்ஹாசனை வானதி திட்ட சொன்னாங்க… கராத்தே தியாகராஜன் பத்த வச்ச சரவெடி

தமிழக பாஜக சார்பில் நாளை நமதே; தமிழ்நாடும் நமதே எனும் தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சாஸ்திரி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜவின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசுகையில், ‘‘சமீபத்தில் மலேசியாவில் நடந்த ராதாரவியின் 50 ஆண்டுக்கால கலைச்சேவையை பாராட்டும் விழாவில் கலந்துகொள்ள அங்குச் சென்றேன். அப்போது, ராதாரவியும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் ராதா ரவி. என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அதாவது, விஜய்யை பத்தி நயினார் நாகேந்திரன் பேசியதை வானதி சீனிவாசன் கண்டிக்கும் வகையில் பேசியிருக்கிறாராமே. தனி நபரைப் பத்தி பேசக்கூடாதா?

இதே வானதி சீனிவாசன், 2021ல் கோவையில் தனக்காக பிரசாரம் செய்ய என்னைக் கூப்பிட்டு, ஒரு கூட்டத்துக்கு 1 லட்சம் ரூபான்னு 4 கூட்டத்துக்கு 4 லட்சம் கொடுத்து கமல்ஹாசனைத் திட்டச் சொன்னாங்க. கமலுக்கு எத்தனைப் பொண்டாட்டின்னு திட்டிப்பேசச் சொன்னாங்க. இன்னைக்கு, நயினார் பேசினத்துக்கு கண்டிக்கிறாங்க. அன்னைக்கு கமல்ஹாசனை திட்டச் சொன்னாங்க. இன்னைக்கு இப்படிப் பேசுறாங்க. இது வினோதமா இருக்கே?. எனக்கு ஒன்னுமே புரியலையே? என ராதாரவி என்னிடம் கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியலை. இப்படி பல்வேறு பிரச்னைகள் தமிழ்நாட்டு அரசியலில் ஓடிக்கிட்டு இருக்கிறது’’ என்று பேசியிருக்கிறார்.

கராத்தே தியாகராஜனின் இந்த பேச்சு, கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் பரபரப்பானது. அது மட்டுமல்ல, ராதாரவி சொன்னதாக பாஜ எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனைப் பற்றி கராத்தே தியாகராஜன் கொளுத்திப் போட்ட இந்த வெடி, தமிழக பாஜ தலைவர்களிடமும் கமலாலய வட்டாரங்களிலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

Related Stories: