கோவை, பிப். 26: கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நொய்யல் ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. நொய்யல் ஆறு நன்னீருக்கான இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆச்சாங்குளம் தலைவர் தங்கராஜ், கண்ணம்பாளையம் குளம் தலைவர் சந்திரசேகர், தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் சண்முகம், ஏர்முனை இளைஞரணி தலைவர் வெற்றி உள்பட பலர் பங்கேற்றனர். இதில், தொழிற்சாலை கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.
உள்ளாட்சி நிர்வாகங்கள் கழிவு நீரை ஆற்றில் விடுகிறது. எனவே, அனைத்து உள்ளாட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ வேண்டும். திடக்கழிவுகளை கொட்ட கூடாது. மணல் திருட்டை தடுக்க வேண்டும். நொய்யல் பாசன குளங்கள், ராஜா வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து கால்வாயை சுத்தம் செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
