திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இன்றிரவு மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சென்னை திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோயிலில் இந்தாண்டு மாசி திருவிழா இன்று இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைதொடர்ந்து 23ம் தேதி காலை சூரிய பிரபையில் சந்திரசேகரர் உற்சவம், மாலை சந்திர பிரபையில் உற்சவம் இரவு தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் உற்சவம் வருகிற 28ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9.05 மணி முதல் 10.10 மணிக்குள் சந்திரசேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார். 2ம் தேதி திங்கட்கிழமை காலை 10.10 மணி முதல் 11.55 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக்கல்யாண உற்சவமும் பிற்பகல் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் தியாகராஜசுவாமி உற்சவம் நடக்கிறது. விழாவில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
இதனிடையே, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி, அறநிலையத்துறை உதவி ஆணையர் நற்சோனை, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றை செய்துள்ளனர்.
