கத்திவாக்கம் பஜார் தெருவில் மாற்று கடை ஒதுக்க வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் மனு

 

திருவொற்றியூர்: கத்திவாக்கம் பஜார் தெருவில் சிஎம்டிஏ சார்பில் ரூ.11.5 கோடி செலவில் மீன், காய்கறி மற்றும் மளிகை கடைகளும், அதேபோல் பல கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், ஆரம்ப சுகாதார மையமும் கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்த கட்டிடங்களை இன்னும் ஒரு சில தினங்களில் திறப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இவ்வாறு திறக்கப்பட உள்ள கட்டிடங்களுக்கு வாசலில் இடையூறாக உள்ள சில சாலையோர கடைகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு புதிய சென்னை மாநகராட்சி கட்டிடங்களை ஆய்வு செய்ய வந்த மண்டல உதவி ஆணையர் பத்மநாபன் மற்றும் அதிகாரிகளிடம் தாங்கள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருவதாகவும், அப்புறப்படுத்தப்படும் கடை வியாபாரிகளுக்கு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மாற்று கடை வழங்க வேண்டும் எனக் கூறி அதற்கான மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர். உதவி பொறியாளர் அலுவலக வாசலில் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: