கோவை: தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் உயர் கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகம் என ஆளுநர் முன்னிலையில் ஹோமி பாபா தேசிய நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி தெரிவித்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 40வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 1308 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். விழாவில் முதன்மை விருந்தினராக மும்பையில் உள்ள ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் காமாட்சி முதலி பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 47 சதவீதம் முதல் 50 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட மிக அதிகம். இதற்கு முக்கிய காரணமாக தமிழக அரசு செயல்படுத்திய தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் உள்ளன. இதனால் தான் தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உலகளவில் அதிகமாக மின் உற்பத்தி செய்யும் 3-வது நாடாக இந்தியா உள்ளது. தற்போது தனியார் துறை மூலம் அணுசக்தி உற்பத்தி செய்ய ஓன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது 2047ல் நமது நாட்டின் மின்சார உற்பத்தி மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
