கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஒரு முக்கியமான கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ‘‘உலகக்கோப்பை தொடரை நடத்த இலங்கை மிக ஆர்வமாக உள்ளது. குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டன. திடீரென பாகிஸ்தான் விளையாட மாட்டோம் என பின்வாங்கினால், அது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தபோது, மற்ற பெரிய நாடுகள் அங்கு வந்து விளையாட தயங்கின. ஆனால் இலங்கை அணி, ஆபத்தான சூழலிலும் பாகிஸ்தான் வந்து விளையாடியது. இரு நாட்டு வாரியங்களுக்கும் இடையிலான அந்த நட்பை, பரஸ்பர மரியாதையை கருத்தில் கொண்டு, நீங்கள் எங்களுக்கு கைகொடுக்கும் வகையில், இந்தியாவிற்கு எதிராக ஆட வேண்டும்,’’ என்று தெரிவித்துள்ளார்.
* ‘விளையாட்டுக்கு நல்லதல்ல’ பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா கூறுகையில், ‘‘எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அது விளையாட்டுக்கு நல்லதல்ல. என் நெஞ்சைத் திறந்து வைத்துக்கொண்டு நான் அதைச் சொல்ல முடியும். குழந்தைகளாக வளர்ந்த நாம் அனைவரும் கிரிக்கெட் வீரர்களை நோக்கிப் பார்த்திருக்கிறோம். நாம் முன்மாதிரிகள். நாம் இப்படி நடந்து கொண்டால், குழந்தைகள் இவற்றையெல்லாம் கற்றுக்கொள்வார்கள். விளையாட்டுகளில் இது நடக்கக்கூடாது” என்றார்.
