கணவரின் வருமானத்தை முடக்கிய மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை: டாக்டர் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

பிரயாக்ராஜ்: கணவனின் வருமானத்தை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் முடக்கியதால், அவருக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்தவர் டாக்டர் வேத் பிரகாஷ் சிங். ஓமியோபதி மருத்துவரான இவருக்கும், இவரது மனைவி வினீதாவுக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வினீதாவின் சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டர் வேத் பிரகாஷை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் குண்டு பாய்ந்ததால், அவரால் முன்பு போல பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜீவனாம்சம் கோரி வினீதா தாக்கல் செய்த மனுவை குஷிநகர் குடும்பநல நீதிமன்றம் கடந்த 2025ம் ஆண்டு மே 7ம் தேதி தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வினீதா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ேநற்று விசாரித்த நீதிபதி லட்சுமி காந்த் சுக்லா, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், ‘கணவனின் வருமானத்தை ஈட்டும் திறனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரே முடக்கியுள்ளனர். தவறு செய்தவர்களே அதிலிருந்து ஆதாயம் தேட அனுமதிக்க முடியாது. இது மிகப்பெரிய அநீதிக்கு வழிவகுக்கும். ஒரு கணவன் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது கடமை என்றாலும், அது அவரது வருமானத்தைப் பொறுத்தே அமையும். இந்த வழக்கில் மனுதாரரின் குடும்பத்தினரே கணவனின் வருமானத்தை அழித்துள்ளதால், அவருக்கு ஜீவனாம்சம் கோர உரிமை இல்லை’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Related Stories: