தொண்டி, ஜன.22: தொண்டி கடற்கரை பகுதியில் பொதுமக்கள் பொழுது போக்க வசதியாக கடற்கரை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி கடற்கரை பகுதி மாவட்டத்தில் நீளமான கடற்கரையை கொண்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூருக்கு தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கடற்கரை பகுதியில் எவ்வித வசதியும் இல்லாததால் முகம் சுழித்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் மாலை நேரங்களில் பொழுது போக்கிற்கு செல்கின்றனர்.
அமர்வதற்கு இருக்கை கூட கிடையாது. பொதுமக்களின் நலன் கருதி பொழுது பூங்கா அமைக்க வேண்டும். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தொண்டி பகுதி மக்கள் பொழுது போக்கிற்காக ராமநாதபுரம் அரியமான் பீச் உள்ளிட்ட பகுதிக்கு அதிக பொருட்செலவு செய்து செல்கின்றனர். தொண்டி கடற்கரையில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வேண்டும். கடற்கரை பகுதியில் அமர இருக்கைகள் அமைத்தால் வசதியாக இருக்கும் என்றனர்.
