தவெக பொதுக்கூட்டம், மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி நிதி பெற்றது அம்பலம்: நடிகர் விஜய், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் இன்று சிபிஐ விசாரணை

* என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கிய ஆதாரங்கள்
* விசாரணை முடிவில் கைதாக வாய்ப்பு

சென்னை: தவெக பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நடிகர் விஜய் தனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மூலம் பல நூறு கோடி நிதி பெற்று சட்டவிரோதமாக பயன்படுத்திய சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் நடைபெறும் விசாரணைக்கு பிறகு என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி கைதாக அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல் ெவளியாகி உள்ளது.

தவெக தலைவரான நடிகர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகினார். அவர்களிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்கப்பட்டன.

குறிப்பாக சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய் கூட்டத்திற்கு தேவையான பணம் எங்கிந்து வருகிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது. நடிகர் விஜய் செலவு செய்கிறாரா அல்லது கட்சியின் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா மற்றும் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் செய்கிறாரா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் விஜய்யின் அரசியல் ஆலோசகரான திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி தான் பணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதன்படி தவெக தலைவரான நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆஜராக கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பினர். கடந்த 12ம் தேதி நடிகர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி சென்று, சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது தவெக நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் படி, நடிகர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர்.

சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜயிடம் கரூர் கூட்டத்திற்கு காலத்தாமதமாக வர யார் ஆலோசனை கொடுத்து வழிநடத்தியது என்று கேட்டப்பட்டனர். அதற்கு விஜய் எனது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமிதான் அனைத்து யோசனைகளும் கொடுத்தார். அவர் கூறியபடிதான் நான் கட்சி கூட்டங்களில் பேசுவது, கலந்து கொள்வது எல்லாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. நீண்ட விசாரணைக்கு பிறகு மறுநாள் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது நடிகர் விஜய் பொங்கல் பண்டிகை வருவதால் 19ம் தேதி நேரில் ஆஜராவதாக கடிதம் மூலம் உறுதி அளித்துள்ளார்.

அதன்படி சிபிஐ அதிகாரிகள் விஜய்யை 19ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக அனுமதி வழங்கினர். இதற்கிடையே நடிகரான விஜய்க்கு கட்சி கூட்டம் மற்றும் மாநாட்டிற்கு எந்த வகையில் பணம் வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தினர். விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பின்னணி குறித்து தனியாக விசாரணை நடத்தினர். ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ போதகர் என்று தெரியவந்தது. பல கிறிஸ்துவ பிராத்தனை கூட்டங்களில் ஜான் ஆரோக்கியசாமி பேசிய வீடியோக்களை பெற்று ஆய்வு செய்தபோது, அவர், வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்துவ அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் பணம் கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வருவதும் தெரியவந்தது.

அதோடு இல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி கிறிஸ்துவ கூட்டங்களில் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ‘சாத்தானின் பிள்ளைகள்….. ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளிடம் தீவிரவாத பயிற்சி பெற்றவர்கள்’ என்று பேசியது தெரியவந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விஜய் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மீது தனி கவனம் செலுத்தி நடிகர் விஜய் உடனான தொடர்புகள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திய போது, கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிய பல நூறு கோடி பணத்தை நடிகர் விஜய் நடத்தும் தவெக கட்சி செலவுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

அதற்கான வங்கி கணக்கு விபரங்களை அனைத்தையும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைப்புகளை கண்காணிக்கும் என்ஐஏ மூலம் உறுதியாகியது. வெளிநாட்டு கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகங்களை முறியடிக்க நடிகர் விஜய் மூலம் ஜான் ஆரோக்கியசாமி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. விஜய் . கட்சி ஆரம்பித்தது முதல் ஜான் ஆரோக்கிய சாமி உதவியுடன் தமிழகத்தில் பல நூறு கோடி பணம் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை மத்திய உளவுதுறையும் உறுதி செய்துள்ளது.

இதுவரை நடிகர் விஜய்யின் கட்சி பணிக்கான அனைத்து செலவுகளை நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே ரகசியமாக கவனித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகளிடம் முந்தைய விசாரணையின் போது ஆதவ் ஆர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் அளித்த வாக்குமூலம் அனைத்தும் உண்மையானது என தெரியவந்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் நடிகர் விஜய், அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

சிபிஐ சம்மன்படி ஜான் ஆரோக்கியசாமி இன்று நேரில் ஆஜரானால், அவரிடம் தவெக பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டுகளுக்கு செலவு செய்த பணம் தொடர்பான கேள்விகளை வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களில் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரடியாக கேட்க உள்ளனர். அப்போது நடிகர் விஜயிடமும் ஜான் ஆரோக்கிய சாமி முன்னிலையில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிபிஐ மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக தவெக கட்சிக்கு பயன்படுத்தியது உறுதியானால், ஜான் ஆரோக்கியசாமியை சிபிஐ அதிகாரிகள் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படலாம். அதன் பிறகு அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி இறுதியில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு நடிகர் விஜய் புறப்பட்டு சென்றார்.

Related Stories: