சபரிமலையில் நாளை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி: 20ம் தேதி நடை சாத்தப்படுகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மாலையில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. சுமார் 1.70 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்தனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல கோயில் வருமானமும் அதிகரித்துள்ளது. மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த 3 தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இன்றுடன் மண்டல, மகரவிளக்கு கால நெய்யபிஷேகம் நிறைவடையும். நாளை மறுநாள் (20ம் தேதி) காலை 6.30 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.

Related Stories: