தொண்டி பகுதியில் போலீசார் ஆய்வு

தொண்டி,டிச.18:தொண்டி அருகே எஸ் பி பட்டினம் கடற்கரை முகத்துவார பகுதியில் அடிக்கடி இலங்கை படகு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மண்டபம் கடற்படை போலிசார் ஆய்வு செய்தனர். தொண்டி கடல் பகுதியில் அதிகமாக கஞ்சா கடத்தப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, முள்ளிமுனை கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 170 கிலோ கஞ்சாவை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அவ்வப்போது அதிகளவில் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கடத்தல் கும்பல் தொண்டி மற்றும் சுற்றுவட்டார கடல் பகுதியை பயன்படுத்துவதாக தெரிகிறது. தொண்டி அருகே உள்ள எஸ்பி பட்டினம் முகத்துவாரம் பகுதிக்கு இலங்கையிலிருந்து அதிவேக பைபர் படகு வருவதாக இப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மண்டபம் கடற்படை போலீசார் ஆய்வு செய்தனர். மீனவர்கள் கூறுகையில், அவ்வப்போல் அதிவேக பைபர் படகு ஒன்று வருகிறது. மின்னல் வேகத்தில் சென்று விடுகிறது. இலங்கையிலிருந்து வருவதாகவும் எதற்கு வருகிறது என்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

Related Stories: