சத்தியமங்கலம், ஏப். 2: சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியில் இருந்து ஸ்டீல் பைப்புகள் பாரம் ஏற்றிய லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.
சத்தியமங்கலத்தை சேர்ந்த பூபதி (22), ஓட்டினார். சஞ்சய் (25), உடன் இருந்தார். திம்பம் மலைப்பாதை 18வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வனப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் பூபதி, சஞ்சய் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. சாலையோரம் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
