கோவை, ஜன. 17: கோவையில், காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு, ரூ.3.76 லட்சம் மோசடி செய்த ஒடிஷா வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள ஒரு வங்கியில், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்கு தெரியாமல், காசோலையில் அவரின் கையெழுத்தை போட்டு வங்கியில் செலுத்தி, மர்ம நபர் ஒருவர் ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவானார். தனது வங்கிக் கணக்கில் பணம் மாயமானதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, கமிஷர் சுமித் சரணின் உத்தரவுப்படி, குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையிலான தனிப்படையினர் பணத்துடன் மாயமான நபரைத் தேடி வந்தனர். இந்நிலையில் காசோலையில் போலியாகக் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுச் சென்ற ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த ஹிமான்சூ குமார் மோபத்ரா(23) என்பவரை கோவையில் ஆர்.எஸ்.புரம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.