பெரணமல்லூர், நவ.22: பெரணமல்லூர் வட்டார அளவில் வானவில் மன்றம் சார்பில் அறிவியல் பழகு தலைப்பில் நடைபெற்ற போட்டியில் 66 மாணவர்கள் கலந்து கொண்டனர். பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர்கள் சத்யராஜ், ரங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொறுப்பு) செண்பகவல்லி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார அளவில் இருந்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 66 மாணவர்கள் கலந்து கொண்டு இன்றைய உலகில் மிகவும் சவாலாக திகழும் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, நீர் மேலாண்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்த செயல்முறைகளை விளக்கி எடுத்துரைத்தனர். மேலும் இதுகுறித்த கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் குறித்து ஆசிரியர்கள் சங்கீதா, சரவணன் மற்றும் சரவணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஆசிரிய பயிற்றுநர்கள் அரிதாஸ், ராமலிங்கம் சுகந்தி, திருமலை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 25 பேர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் அப்பாஸ் அலி நன்றி கூறினார்.
