பெரணமல்லூர், பிப்.18: பெரணமல்லூர் அருகே பச்சையம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ25.97 லட்சம் காணிக்கையை செலுத்தினர். பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வளாகத்தில் பத்தர்கள் காணிக்கை பணம் செலுத்த வசதியாக 11 நிரந்தர உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து, நேற்று இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் ஜீவானந்தம், உதவி ஆணையர் சண்முகசுந்தரம், ஆய்வர்கள் நடராஜன், அசோக், செயல் அலுவலர் ஹரிஹரன், மேலாளர் ஜெகதீசன், ஊராட்சி செயலர் செல்வகுமார், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கையை காலை முதல் மாலை வரை எண்ணபட்டது. அதில் ரூ.25 லட்சத்து 97 ஆயிரத்து 347ஐ பக்தர்கள் உண்டியலில் காணிகையாக செலுத்தியுள்ளனர். மேலும், 318 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளி என பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். இதனையடுத்து பக்தர்களின் காணிக்கை பணம் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. மேலும் பெரணமல்லூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
