தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பஸ்கள் இயக்கம் நிறுத்தம்: உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்படுவதாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு கடந்த 7ம் தேதியன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டு அந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கிவிடப்பட்டு கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை 70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை, இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப் போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து பாதிப்படையும் மற்றும் தமிழகத்திலிருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த விஷயத்தில் உடனடியாக தமிழக அரசும் கேரளா அரசும் தலையிட்டு, இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: