பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக நெல் கொள்முதலை முடிக்க வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நெல் அறுவடைப் பணிகள் கடந்த 1ம் தேதி முதல் தீவிரமாக நடந்து வந்தன. அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லில், 40 சதவீதம் அளவுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. நெல் கொள்முதல் செய்ய முன்கூட்டியே எந்த ஏற்பாடும் செய்யாததால் டெல்டா மாவட்டங்களில் அறுவடையான நெல் தேங்கும் நிலை ஏற்பட்டது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக திமுக அரசு அறிவித்திருந்தது. ஆனால், வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. பருவமழைக்கு முன்பாக நெல் கொள்முதலை முடித்திருக்க வேண்டும். கொட்டித் தீர்க்கும் கனமழையில் லட்சக்கணக்கான டன் நெல் நனைந்து வீணாகி வருகின்றன. நெல் கொள்முதல் செய்யாமல் சுமார் 20 நாட்கள் காலதாமதம் ஆனதால் தொடர் மழையால் நெல் முளைத்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, திமுக அரசு டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: