புதிய சிந்தனையில்லாத விஜய்யால் ஜெயிக்கவே முடியாது: தமிழிசை சவுந்தரராஜன் ஆரூடம்

ஆலந்தூர்: சென்னை மூவரசன்பட்டு பகுதியில் விநாயகர் சிலைவைத்து வழிபட்டு வருகின்றனர். இங்கு பாஜக மாவட்ட தலைவர் குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்தார். அப்போது குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதன்பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;
விநாயகர் சதுர்த்தி விழா மக்களை இணைக்கும் விழாவாக உள்ளது. கலையை வளர்க்கவும் அன்னதானம், கண்தானம், ரத்த தானம் வழங்கும் விழாவாகவும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஆன்மீகம் வளர்ந்து ஒங்கும். இன்னும் 8 மாதத்தில் அதிமுக- பாஜக கூட்டணிதான் வெற்றி பெறும். தற்போது மக்கள் துன்பப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். மோடி தமிழக மக்களுக்கு எல்லா நல்லதும் செய்து வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆனால் போட்டி என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையேதான். அடுத்த இடத்துக்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டு கொள்ளலாம். விஜய் மாற்று சிந்தனையை சொல்வார் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், விஜயகாந்தை சேர்த்து இருக்கிறார். இவர்கள் சிந்தனையில் கட்சி நடத்துகிறார். புதிய சிந்தனை இல்லாமல் புதிய கட்சி எதற்கு என்று தெரியவில்லை.

விஜய் மாநாட்டில் பவுன்சர் தூக்கி போட்டது யார் என்று விவாதம் நடக்கிறது. பவுன்சர் கலாச்சாரமே தவறு. தூக்கிப் போட்டவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாதவரால் எப்படி ஆட்சி நடத்த முடியும்? கலாட்டா, சலசலப்பு தான் செய்ய முடியும். விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது என்பதை ஒவ்வொரு மாநாட்டில் நிரூபித்து கொண்டு இருக்கிறார். இவ்வாறு கூறினார்.

Related Stories: