வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தவறு இல்லை: சொல்கிறார் டிடிவி. தினகரன்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர தொண்டனாக இருந்து வந்த நயினார் நாகேந்திரன் இன்றைக்கு பாஜவின் மாநில தலைவராக இருப்பது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு நிகராக எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசுவது என்பது ஏற்கத்தக்கது அல்ல. இதனை உண்மையான அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது தேர்தல் வரும் நேரத்தில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மையே. எனவே, அவரை உரிய முறையில் அழைத்து மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு தலைவர்கள் முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மற்ற மாநில தொழிலாளர்கள் பிழைப்பை தேடி தமிழகத்தில் வந்து தங்கி இருந்து ரேஷன் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்ற பிறகு அவர்கள் இங்கு வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் தவறு ஏதும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: