சமூகத்தில் பின் தங்கிய 1000 குழந்தைகள் இலவச சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு: திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் சேகர் தகவல்

சென்னை: சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: ராஜஸ்தான் யூத் அசோசியேசன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் சமூகத்தில் பின் தங்கிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் 1000 பேரை, திருப்பதி தரிசனத்துக்கு இலவசமாக ஏப்.25ம் தேதி அழைத்து செல்கிறோம். இந்த நிகழ்வின் துவக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடக்க உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொள்கிறார். இதற்காக தனி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் இலவச தரிசனம் முடித்த பின் தேவஸ்தானத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்படும். குழந்தைகளுடன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 300 பேர் வர உள்ளனர். இந்த பயணத்தில் வரும் குழந்தைகளில் பெரும்பாலானோர் திருப்பதிக்கு ஒருமுறை கூட சென்றது இல்லை, ரயிலிலும் பயணித்தது இல்லை. இதுபோன்ற முன்னெடுப்பை எடுத்த ராஜஸ்தான் யூத் அசோசியேசன் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு நன்றி ெதரிவித்து கொள்கிறோம். இதை ஆண்டுதோறும் செய்ய வேண்டும். அதற்கு திருப்பதி தேவஸ்தானம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சமூகத்தில் பின் தங்கிய 1000 குழந்தைகள் இலவச சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு: திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் சேகர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: