மார்த்தாண்டம், பிப்.25: மார்த்தாண்டத்தில் கொள்ளையனிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளரிடம் நீதிபதி ஜெய்சங்கர் ஒப்படைத்தார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியை சேர்ந்தவர் பொன் விஜய் (40). மார்த்தாண்டம் பஸ் நிலையம் எதிரில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி இரவு இவரது வீட்டில் புகுந்த கொள்ளையன் பூஜை அறையில் வைத்திருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தான். பின்னர் அங்கிருந்த நகைக்கடை சாவியை எடுத்து சென்று பஸ் நிலையம் அருகே உள்ள நகைக்கடையை திறந்து 140 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.இந்த சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன் மார்த்தாண்டம் மெயின் ரோட்டில் கிறிஸ்டோபர் என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில் 70 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்தபடி நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த தங்க நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்து சென்றார். அடுத்தடுத்த நடந்த ெகாள்ளை சம்பவங்களை தொடர்ந்து எஸ்பி நாத் உத்தரவின்பேரில், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்தின் மேற்பார்வையில், எஸ்ஐக்கள் சிவசங்கர், சுந்தரலிங்கம், அருளப்பன், ரகுபாலாஜி, விஜயன் உள்பட 6 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.