கோவில்பட்டி, மார்ச் 14: தேர்தல் பிரசாரத்தின் போது வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது என கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடந்த அனைத்து அரசியல் கட்சியினர் கலந்தாய்வு கூட்டத்தில் டி.எஸ்.பி.ஜெபராஜ் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் எஸ்.பி.முரளிராம்பா உத்தரவுப்படி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசியல் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டியில் காவல்துறை சார்பில் நடந்தது. கூட்டத்திற்கு டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமை வகித்தார். மேற்கு, கிழக்கு இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், அய்யப்பன், கழுகுமலை, கயத்தாறு இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, ஆவுடையப்பன் மற்றும் திமுக, அதிமுக, பாஜ, பாமக, விடுதலை சிறுத்தைகள், அமமுக, தாமக, மதிமுக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டிஎஸ்பி ஜெபராஜ் பேசியதாவது: கடந்த 10ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்து விட்டது. எனவே அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின்போது வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.