கோவை, பிப். 14: கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்த ராக்கியா பாளையம், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் காமராஜ். வெல்டிங் தொழிலாளி. இவருடைய மகள் மோகன பிரியா(வயது 21).
இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். எனவே பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோகன பிரியா திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி மோகன பிரியா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். வீட்டில் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் ‘‘எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆதலால் வீட்டில் இருந்து செல்கிறேன்’’ என எழுதி இருந்தார். எங்கு தேடியும் மோகன பிரியா கிடைக்க வில்லை. இது குறித்து அவருடைய தந்தை காமராஜ், பெரிய நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான மோகன பிரியாவை தேடி வருகின்றனர்.