செய்துங்கநல்லூர், பிப்.13: ஆராய்ச்சி மாணவர்கள் புதிது புதிதாக கண்டு பிடித்தால் உலக அளவில் இந்தியா முதல் நிலை பெறும் என கிருஷ்ணாபுரம் காந்தவியல் மையத்தில் நடந்த சிறப்பு பயிற்சி முகாமில் மனோன்மணியம் பல்கலைகழக துணை வேந்தர் பாஸ்கர் பேசினார்.அகில இந்திய அளவில் இயற்பியல், கணிதம் கற்ற முதுநிலை ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்கும் இம்பிரன்ஸ் 2019 என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நெல்லை கிருஷ்ணாபுரம் காந்தவியல் ஆராய்ச்சி நிலையத்தில் 4 நாள் நடந்து வருகிறது. இதில் துவங்க விழாவிற்கு காந்தவியல் ஆய்வு மைய மும்பை தலைமை இயக்குனர் டி.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். இஸ்ரோ விஞ்ஞானி ராஜிவ்வா முன்னிலை வகித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் முகாமை துவக்கி வைத்து பேசும் போது, இன்றைக்கு இந்தியா தொழில் நுட்பத்திலும், ஆய்விலும் முதன்மை வகிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. அதே வேளையில் நமது ஆய்வு களத்தில் பல வெற்றிகளை குவித்தாலும், முன்னணி பெற மேலும் உழைக்கவேண்டிய அவசியம் உள்ளது. இந்த உழைப்பு நமது ஆராய்ச்சி மாணவர்கள் கையில் தான் உள்ளது. எனவே உங்களுடைய உழைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு இந்தியாவை உலக அளவில் முன்னிலை படுத்தும். அதற்கு உங்களை தயார்படுத்தவே இதுபோன்ற முகாம் நடைபெறுகிறது.
எனவே இந்தியாவினை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல தாங்கள் அயராது உழைக்க வேண்டும். புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிக்கவேண்டும். குறிப்பாக நாம் பயன்படுத்தும் அனைத்து நவீன கருவிகளும் அயல் நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த கருவிகள் உள்நாட்டில் தயாராகும் போது இந்தியா மேலும் வலுப்படும். அதற்கான நடவடிக்கையில் ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபடவேண்டும். நமது கருவிகளை கண்டு வெளிநாட்டவர் என்றைக்கு வியக்கிறார்களோ அன்று தான் இந்தியா முழுமையான முன்னேற்றம் அடைந்தது என்று அர்த்தம் என்று அவர் பேசினார்.முன்னதாக மும்பை ஆய்வு மைய பேராசிரியர் சத்தியாவி சிங் வரவேற்றார். கிருஷ்ணாபுரம் காந்தவியல் முன்னாள் தலைவர் குமரகுருபரன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பன்னீர் செல்வம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.