கோவை, ஜன. 9: தமிழக அரசு திருவள்ளுவர் தினமான வரும் 16ம் தேதி ஆடு, மாடு, கோழிகளை வெட்ட, இறைச்சிகளை விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இதனால், கோவை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும். உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூர் ஆடு அறுவைமனை, சத்தி ரோடு, போத்தனூர் மாடு அறுவைமனைகள், துடியலூர் ஆடு அறுவைமனை மற்றும் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.