ராணிப்பேட்டை, டிச. 6: ராணிப்பேட்டையில் 8 மாத நிலுவை சம்பளம் கேட்டு 18வது நாளாக பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராணிப்பேட்டை பெல் ஒப்பந்த தொழிலாளர்கள் 28 பேருக்கு கடந்த 8 மாதமாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படவில்லை. இதனைக்கண்டித்து சங்க தலைவர் வேலு தலைமையில் ஊழியர்கள் பெல் நுழைவு வாயில் முன் கடந்த 18 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த போராட்டத்தில் சம்பளம் மற்றும் போனஸ் உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.