கூடுதல் விலையில் சரக்கு விற்றால் ₹10 ஆயிரத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து அபராதம் ஊழியர்களுக்கு மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை டாஸ்மாக் கடைகளில்

வேலூர், நவ.1:தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதலாக விற்பனை செய்தால் ₹10 ஆயிரத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் எச்சரித்துள்ளார்.நாடு முழுவதும் வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை களைக்கட்டும். இதைபயன்படுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யலாம் என்று கருதப்படுகிறது. இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்படும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதாவது, மதுபான சில்லறை விற்பனை கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ₹1க்கு ₹1000 முதல் அதிகபட்சமாக ₹10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதனுடன் சதவீதத்துக்கு ஏற்ப ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும்.மேலும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளரை, மாவட்ட மேலாளர் விற்பனை குறைவாக நடக்கும் மதுபான கடைக்கு மாறுதல் செய்ய முதுநிலை மண்டல மேலாளருக்கு முன்மொழிவு அனுப்பிட வேண்டும்.மேலும் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக ₹20 க்கும் அதிகமாக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இப்புகார்கள் மீது ஆய்வு மேற்கொண்டதில் இப்புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே எம்ஆர்பி விலையை விட ₹20 மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை பணியாளர்களை உடனடியாக மதுபான கடையிலிருந்து விடுவிப்பு செய்து உரிய அபராத தொகையினை வசூல் செய்த பின்னர் மாவட்டத்தில் உள்ள மதுபான கிடங்கில் பணியமர்த்த வேண்டும். 2வது முறையாக அதே கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அந்த கடைகளில் பணிபுரியும் அனைத்து மேற்பார்வையாளர்களையும் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.இவ்வாறு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் கிடங்கு பணியில் இருத்தல் வேண்டும். அந்த கடைப்பணியாளர்களை மதுபான கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணியிட மாற்றம் முதுநிலை வரிசை அடிப்படையில் அந்தந்த முதுநிலை மண்டல மேலாளர்கள் மூலமாகவே நடைபெற வேண்டும்.மேலாண்மை இயக்குனரின் இந்த அதிரடி உத்தரவால் டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: